

காவேரிப்பட்டணம் பகுதியில் மாங்காய்களில் ஆந்திரவைச் சேர்ந்த புதிய வகைப் புழுக்கள் தோன்றி உள்ளதாக தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில், தட்டக்கல், ஜெகதேவி, ஆனந்தூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் மா மரங்களில் ஆந்திரவைச் சேர்ந்த புதிய வகைப் புழுக்கள் தோன்றியுள்ளன. தமிழகத்தில் இந்த வகைப் புழுக்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் முறையாக உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக பெங்களூரு தேசிய வேளாண் பூச்சியியல் மூலாதார ஆய்வகம் முதன்மை விஞ்ஞானி முனைவர் மோகன், கிருஷ்ணகிரி மாவட்டம் எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் முனைவர் சுந்தர்ராஜ், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் கோவிந்தன், கிருஷ்ணகிரி தோட்டக்கலை இணை இயக்குநர் உமாராணி, துணை இயக்குநர் ராம்பிரசாத் ஆகியோர் காவேரிப்பட்டணம் அடுத்த என்.தட்டக்கல் கிராமத்தில் புழு பாதித்த மாங்காய்களை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி தோட்டக்கலை இணை இயக்குநர் உமாராணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவேரிப்பட்டணம் பகுதியில் 428 ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. என்.தட்டக்கல் கிராமத்தில் உள்ள மா வயல்களில் புதிய வகைப் புழுக்கள் உருவாகி உள்ளன. தொடர்ந்து விவசாயிகள் மருந்து தெளித்து வருவதால் இவை உருவாகி இருக்கலாம். இதற்கு முதல் உதவியாக 2 மருந்துகளை வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார்.
பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் கோவிந்தன் கூறுகையில், இந்த புழுக்கள் புதிய வகையாக உள்ளதால், பரிசோதனைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது என்றார்.
விவசாயிகள் கூறுகையில், இந்த புழுக்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு மருந்துகள் வருவதற்குள் சாகுபடி முடிந்துவிடும். ஏற்கெனவே ஒரு ஏக்கருக்கு 40 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். தற்போது பரிந்துரைத்துள்ள மருந்தின் விலை மிகவும் அதிகம். அவற்றை வாங்கி பயன்படுத்துவதற்குள் மாங்காய்கள் முற்றிலும் அழுகி விடும். எனவே மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்து, மருந்துகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மேலும் இந்த புழுக்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.