Published : 19 Apr 2021 03:17 AM
Last Updated : 19 Apr 2021 03:17 AM

ரயில் நிலையங்களில் - முகக்கவசமின்றி வந்தவர்களிடம் ரூ.500 வசூல் : அலுவலர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதம்

ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் நேற்று முதல் ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் சிலர், அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கரேனா வைரஸ் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாமல் வந்தாலோ, எச்சில்துப்பினாலோ ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் எனரயில்வே துறை நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்த புதியஉத்தரவு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில் டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாது காப்பு படையினர் ஆகியோர் தனித் தனி குழுக்களாகப் பிரிந்து, ஆங்காங்கே நேற்று பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது, முகக்கவசம் அணியாமல் வந்த பலரைப் பிடித்து, ரூ.500 வரை அபராதம் விதித்தனர். இதற்கான ரசீதையும் பயணிகளிடம் கொடுத்தனர்.

பயணிகள் சிலர் அபராதத் தொகை வசூலிப்புக்கு கடும்எதிர்ப்புத் தெரிவித்து, அலுவலர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ரயில் பயணிகள் சிலர் கூறும்போது, "அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக, நீண்ட தூரம் ரயில்களில் பயணம் செய்து வரும் பயணிகளிடம், முகக்கவசம் அணியவில்லை என்று கூறி ரூ.500 அபராதம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? உண்மையில் பயணிகள் மீது அக்கறை இருந்தால், ரயில்வே நிர்வாகமே பயணிகளுக்கு இலவசமாக முகக்கசவத்தை வழங்கலாமே? ஆனால், ரூ.500 அபராதம் விதிப்பது, பயணிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x