Published : 18 Apr 2021 03:17 AM
Last Updated : 18 Apr 2021 03:17 AM

நடிகர் விவேக் நினைவாக மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி :

கோவை/உதகை

நடிகர் விவேக்கின் மறைவுக்கு, கோவை, நீலகிரி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நடிகர் விவேக்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அறம்செய்ய கரம் கொடுப்போம் (ஏஎஸ்கேகே) அமைப்பு சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தேவைப்படுவோருக்கு 100 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த அமைப்பின் தன்னார்வலர்கள் சுமார் 100 மரக்கன்றுகளை பல்வேறு இடங்களில் நட்டனர். கீரணத்தம் கிராமத்தில் அப்பகுதி இளைஞர்கள் சார்பிலும், கோவையில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகள், அமைப்புகள் சார்பிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவை பெரியார் படிப்பகம் முன்பு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. அன்னூர் காட்டம்பட்டி குளத்தில் ஆலமரக்கன்றுகளை தன்னார்வலர்கள் நட்டனர்.

ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு தனது ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டின் மாபெரும் மரங்கள் நடும் திட்டத்தை தொடங்கிய விவேக் என்றும் நம் நினைவில் நிற்பார். அவர் இதயம் இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் துடித்தது. என் ஆழ்ந்த இரங்கல்கள்"என்று தெரிவித்துள்ளார்.

நீலகிரி

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் ‘பசுமையைக் காக்கும் வகையில் விழிப்புணர்வை பரப்புவதற்காக தனது பிரபல அந்தஸ்தைக் கொடுக்க எப்போதும் தயாராக இருக்கும் ஓர் இணக்கமான ஆளுமை. இவரது ஆதரவுடன் நீலகிரி மாவட்டத்தில் 4 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய முடிந்தது. நீலகிரி மக்கள், விவேக்கை அன்பாக நினைவில் கொள்வார்கள்’’ என குறிப்பிட்டுள்ளார். உதகை அருகேயுள்ள பகல்கோடு மந்தில் தோடர் பழங்குடியினர், மரக்கன்று நட்டுவைத்து நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x