Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

பெரும்புதூர் தொகுதி - காங்கிரஸ் வேட்பாளருக்கு கரோனா தொற்று உறுதி :

கு. செல்வப்பெருந்தகை

பெரும்புதூர்

பெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கு.செல்வப்பெருந்தைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே அவர் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். உடன் இருந்தவர்களும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஏற்கெனவே பல வேட்பாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் பெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட கு.செல்வப்பெருந்தகை(55) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இவர் தேர்தலுக்காக கட்சி தொண்டர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அண்மையில் வாக்குப் பதிவு முடிந்தவுடன், கரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. எனவே, அவர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தன்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இது தொடர்பாக செல்வப்பெருந்தகை தன்னுடைய முகநூல் பக்கத்தில், தனக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள், கட்சியினர், உறவினர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படியும், தங்களை பாதுகாத்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தி உள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம், ஆலந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட பலரும் இவருடன் சேர்ந்து வாக்கு சேகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x