Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

வாக்கை வேறு நபர் செலுத்தியதால் - டெண்டர் வாக்கு செலுத்திய இருவர் :

கோவை

ஒருவரின் வாக்கை, வேறு நபர் செலுத்தினால், உண்மையான வாக்காளர் 49-பி பிரிவின் படி, ‘டெண்டர்’ வாக்கு செலுத்தும் உரிமையை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட ரத்தினபுரியில் வசித்துவரும் சந்திரன் மனைவி கமலம்(62) வாக்களிக்க சென்றபோது, அவரது வாக்கு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு விட்டதாக வாக்குச்சாவடி அலுவலர்கள் கூறியதால் அதிர்ச்சியடைந்தார். “நான் வாக்கு செலுத்தவில்லை. எனது வாக்குரிமையை வழங்க வேண்டும்” என அடையாள அட்டையை காட்டி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அவரது வாக்கை வேறொருவர் பதிவு செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கமலம் டெண்டர் வாக்களிக்க அனுமதியளிக்கப்பட்டது. இதேபோல, கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட கணபதியைச் சேர்ந்த பரத்(22) என்பவரும் டெண்டர் வாக்கு பதிவு செய்தார்.

இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ‘‘டெண்டர் வாக்கை பிரத்யேக படிவம் மூலம் செலுத்தலாம். இவை தனியாக வைக்கப்பட்டு, வாக்குப்பதிவு முடிந்ததும், மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கப்படும். வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்தால், நீதிமன்றம் உத்தரவின் பேரில் டெண்டர் வாக்குகள் எண்ணப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x