Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 2 பூட்டு : நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் 6 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டு, 3 அடுக்கு பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. மேலும், அறைகளுக்கு இரு பூட்டுகள் போடப் பட்டுள்ளது என நாமக்கல் மாவட்டதேர்தல் அலுவலர் தெரிவித்துள் ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் விவிபாட் இயந்திரங்கள் உள்ளிட்டவை திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைத்து அதிகாரிகள் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இப்பணிகளை பார்வையிட்ட நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் கா.மெகராஜ் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்தி வேலுார் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் அதிகாரிகள், கட்சி முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப் பட்டது. மேலும், அறை களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

இந்த அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேர சிசிடிவி கேமரா கண்காணிப்பு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், தொகுதிதேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் மட்டும் நாள்தோறும் வந்து அறைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம். வேறுயாரும் இப்பகுதிக்கு வர முடியாது. ஒவ்வொரு அறைக்கும் இரு பூட்டுகள் போட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒரு சாவி என்னிடமும் மற்றொரு சாவி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இப்பணியின்போது, தேர்தல் பொது பார்வையாளர் ஏ.பி.கார், திருச்செங்கோடு சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ப.மணிராஜ், கொமதேக வேட்பாளர் ஈஸ்வரன், எம்பி ஏ.கே.பி. சின்ராஜ் உள்ளிட்ட அரசியல் கட்சி முகவர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x