Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

புதுச்சேரியில் புதிதாக 173 பேருக்கு கரோனா :

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக 173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையிலான பாதிப்பு எண்ணிக்கை 43 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி மாநிலத்தில் 1,149 பேருக்கு புதிதாக பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி- 168, காரைக்கால்-5 என மொத்தம் 173 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாம், மாஹேவில் புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை.

மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 949 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 43 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

இதில் தற்போது மருத்துவமனைகளில் 453 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,367 பேரும் என மொத்தம் 1,820 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதற்கிடையே கரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி கோரிமேடு ராஜீவ் நகரைச் சேர்ந்த 67 வயது முதியவர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 687 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.60 ஆக உள்ளது.

82,815 பேருக்கு கரோனா தடுப்பூசி

நேற்று 125 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 442 (94.16 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 82 ஆயிரத்து 815 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x