Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

ராமநாதபுரத்தில் தொகுதி வாரியாக - வாக்கு இயந்திரங்கள் வைத்துள்ள அறைக்கு சீல் :

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

இம்மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் உள்ள அறைகளில் வைக்கப்பட்டன. ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், பொதுத்தேர்தல் பார்வையாளர்கள் சொராப் பாபு (ராமநாதபுரம், முதுகுளத்தூர்) விசோப் கென்யோ (பரமக்குடி), அனுராக் வர்மா மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.

அதன்பின் ஆட்சியர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தொகுதிகள் வாரியாக 4 பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் வாயிலில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

69.6 சதவீதம் வாக்குகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் 69.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாவட்டத்தில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. பரமக்குடி தொகுதியில் வாக்கு சதவீதம் 70.59. திருவாடானை தொகுதியில் வாக்கு சதவீதம் 68.72. ராமநாதபுரம் தொகுதியில் வாக்கு சதவீதம் 68.81. முதுகுளத்தூர் தொகுதியில் வாக்கு சதவீதம் 70.29.

மாவட்டம் முழுவதும் நான்கு தொகுதிகளிலும் 5,79,908 ஆண் வாக்காளர்கள், 5,85,189 பெண் வாக்காளர்கள், 63 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 11,65,160 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 3,78,551 ஆண்கள், 4,32,067 பெண்கள், 7 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 8,10,625 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x