Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM

ஓசூர் - பெங்களூரு இடையே கர்நாடகா அரசுப் பேருந்து நிறுத்தம் :

கர்நாடக மாநில அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று காலை முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தலில் வாக்களிக்க தமிழகம் வந்த கர்நாடக தமிழர்கள் மீண்டும் கர்நாடகாவுக்கு திரும்பிச் செல்ல போதிய பேருந்துகள் இன்றி திண்டாடினர்.

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான தமிழர்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலானவர்களுக்கு வாக்குரிமை தமிழ்நாட்டி லேயே உள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு லட்சக்கணக்கான தமிழர்கள் தங்களுடைய சொந்த ஊரில் வாக்களிக்க விடுமுறையில் தமிழகம் வந்திருந்தனர். இந் நிலையில் கர்நாடகா அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வழங்கக்கோரி நேற்று காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இதனால் தமிழக நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்த 100-க்கணக்கான கர்நாடகா அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஓசூர் - பெங்களூரு, தேன்கனிக்கோட்டை - பெங்களூரு, ஓசூர் - கோலார் உள்ளிட்ட பல்வேறு நகர மற்றும் கிராமப்பகுதிகளுக்கு இடையே இயக்கப்பட்டு வந்த 100-க்கும் மேற்பட்ட கர்நாடகா அரசுப் பேருந்துகளின் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நேற்று காலை முதல் கர்நாடகா அரசுப் பேருந்துகள் இன்றி ஓசூர் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

கர்நாடகா அரசுப் பேருந்துகள் இன்றி தேர்தல் முடிந்து தமிழ்நாட்டிலிருந்து மீண்டும் கர்நாடகா செல்லும் தமிழக பயணிகள் மற்றும் ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தினமும் பணி, கல்வி, மருத்துவம் நிமித்தமாக பெங்களூரு சென்று வரும் பயணிகளும் போதிய அளவு பேருந்துகள் கிடைக்காமல் திண்டாடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஓசூர் - பெங்களூரு இடையே இயக்கப் பட்ட தமிழக அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளில் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x