Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM

வாக்குச்சாவடி மையங்களில் சேகரமான - 29 டன் மருத்துவ கழிவுகள் அழிப்பு : சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை

சென்னை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளாக செயல்பட்ட பள்ளிகளில் சேகரமான 29 டன் மருத்துவக் கழிவுகள் அகற்றி, அழிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,061 இடங்களில், 5,911 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வாக்குச்சாவடியில் உள்ள அலுவலர்கள், வாக்களிக்க வரும் கரோனா நோயாளிகள் ஆகியோர் அணிந்துகொள்ள முழு பாதுகாப்பு கவச உடை, முகக்கவசம் உள்ளிட்ட தொற்று தடுப்புக்கான 13 வகையான பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும், வாக்காளர்கள் அனைவருக்கும் பிளாஸ்டிக் கையுறை வழங்கப்பட்டது. அவற்றைச் சேகரிக்க 6 ஆயிரம் மஞ்சள் நிறப் பையுடன் கூடிய, 70 லிட்டர் கொள்ளளவு கொண்ட குப்பைத் தொட்டிகளும் வழங்கப்பட்டன.

வாக்குப்பதிவு முடிந்த நிலையில் கடந்த 6-ம் தேதி இரவே மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இருந்த, கரோனா பரவல் தடுப்புக் கழிவுகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, அவற்றை உயிரி மருத்துவக் கழிவாகக் கருதி, அழிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, மொத்தம் 29 டன் கழிவுகள் அறிவியல் முறைப்படி அழிக்க அனுப்பப்பட்டன.

தொடர்ந்து, வாக்குச்சாவடிகளாக செயல்பட்ட அனைத்துப் பள்ளி வளாகங்களிலும் மாநகராட்சி சார்பில் நேற்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x