Published : 30 Mar 2021 03:16 AM
Last Updated : 30 Mar 2021 03:16 AM

தக்காளி ரூ.5-க்கு விற்பனை : விவசாயிகள் வேதனை

தக்காளி வரத்து அதிகரிப்பு காரண மாக விலை வீழ்ச்சி யடைந்து ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனையானது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, வடமதுரை, அய்யலூர், வேடசந்தூர் உட்பட பல பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் பழநி, ஒட்டன்சத்திரம், அய்யலூர் உள்ளிட்ட இடங்களில் தக்காளி விற்பனைக்கு தனி மார்க்கெட் செயல்படுகிறது. இங்கு கொண்டு வரப்படும் தக்காளிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:

தக்காளிக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை, அளவான தண்ணீர், பயிர் சேதமடைய வாய்ப்பில்லாத நிலை ஆகியவற்றால் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு வாரமாக தக்காளி வரத்து படிப்படியாக அதிகரித்தது. பத்து டன் தக்காளி விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது ஒரு நாளைக்கு 20 டன் தக்காளி விற்பனைக்கு வருகிறது.

இதனால் ஒரு வாரத்துக்கு முன்பு கிலோ ரூ.10-க்கு விற்ற தக்காளி நேற்று ரூ.5-க்கு விற்பனையானது. ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு பெட்டி தக்காளி (14 கிலோ) ரூ.100 முதல் 150 வரை விற்பனையானது. நேற்று ஒரு பெட்டி தக்காளி ரூ.70-க்கு விற்பனையானது. வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தனர்.

ஆனால் விவசாயிகளோ, ஒரு பெட்டி ரூ.100-க்கு விற்றால்கூட நாங்கள் விளைவிக்க ஆகும் செலவு, பராமரிப்புச் செலவு, பறிக்கக் கூலி, வாகனச் செலவு, சுங்கக் கட்டணம், வியாபாரிக்கு கமிஷன் தொகை என கணக்கு பார்த்தால் இழப்பு தான் ஏற்படுகிறது. இந்நிலை தொடர்ந் தால் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுவது மேல். செடி தாங்காது என்பதால் அவற்றைப் பறித்து வெளியில் கொட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x