Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM

முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் :

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு நடத்தி முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா நேற்று பாலக்கோடு பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு நடத்தினார். ஆய்வின்போது, கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க உதவும் முகக் கவசத்தை அணியாமல் பொது இடங்களில் நடமாடியவர்களுக்கு தலா ரூ.200 வீதம் அவர் அபராதம் விதித்தார். மேலும், கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக ஆட்சியர் கூறும்போது, ‘கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் நடமாடுபவர்கள் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா தொற்று தடுப்புக்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டியது கட்டாயம் ஆகிறது. பொது இடங்களில் நடமாடுபவர்களும், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களிலும் அரசின் கரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனில் தொடர்ந்து அபராதம் விதிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் நாட்களில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்’ என்றார்.

ஆய்வின்போது, பாலக்கோடு டிஎஸ்பி சீனிவாசன், வட்டாட்சியர் ராஜா, பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x