Published : 21 Feb 2021 03:20 AM
Last Updated : 21 Feb 2021 03:20 AM

பெட்ரோல், காஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம், மறியல்

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து, திருச்சியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.படம்: ஜி.ஞானவேல்முருகன்

தஞ்சாவூர்/ திருச்சி/ புதுக்கோட்டை/ பெரம்பலூர்

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று தஞ்சாவூர், புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டமும், திருச்சியில் சாலை மறியலும் நடைபெற்றது.

தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்டத் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார், தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவிலிருந்து கீழவாசல் வரை நடைபெற்ற பேரணி, ஆர்ப்பாட்டத்துக்கு மாநகரச் செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன், பாபநாசம் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்டத் தலைவர் டி.ஆர்.லோகநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு கருத்து தெரிவித்ததால் சமூக செயற் பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல, திருச்சியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஜவகர் தலைமையில், பொருளாளர் ராஜா நசீர், பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ் உள்ளிட்டோர் காங்கிரஸ் அலுவலகமான தியாகி அருணாசலம் மன்றத்திலிருந்து தெப்பக்குளம் அஞ்சல் அலுவலகம் நோக்கி நேற்று பேரணியாகப் புறப்பட்டனர். அதற்கு போலீஸார் அனுமதி அளிக்காததால், அந்த இடத்திலேயே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 59 பேரை கோட்டை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் இப்ராஹிம்பாபு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர், வடக்கு மாவட்டத் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே நேற்று பாதயாத்திரையை காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா மாநில மேலிட பொறுப்பாளர் ஜான் அசோக் வரதராஜன் தொடங்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். பாலக்கரை, வெங்கடேசபுரம் வழியாக ரோவர் ஆர்ச் பகுதியில் பாதயாத்திரை நிறைவடைந்தது. அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x