Published : 19 Feb 2021 03:25 AM
Last Updated : 19 Feb 2021 03:25 AM

விபத்தில் காயமடைந்த தலைமை காவலர் குடும்பத்தாருக்கு காவல் துறை சார்பில் ரூ.6.10 லட்சம் நிதியுதவி

சாலை விபத்தில் காயமடைந்த தலைமை ஏட்டுக்கு அவருடன் காவல் பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்றிணைந்து ரூ.6 லட்சம் நிதியுதவியை எஸ்பி.டாக்டர் விஜயகுமார் முன்னிலையில் வழங்கினர்.

திருப்பத்தூர் மாவட்டம், வீட்டு வசதி வாரியம் குடியிருப்புப்பகுதியைச் சேர்ந்தவர் சத்தியம் (52). இவர், திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் தலைமை ஏட்டுவாக பணியாற்றி வந்தார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நகர காவல் நிலையம் அருகே சாலையில் நடந்துச்சென்றபோது அவ் வழியாக இரு சக்கர வாகனம் அவர் மீது மோதியது.

இதில், தலையில் காயமடைந்த சத்தியம் உடனடியாக மீட்கப்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்ட நாட்களாக சிகிச்சையில் இருந்த சத்தியம் குணமடைந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் வீடு திரும்பினார். இதையடுத்து, அவர் விருப்ப ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், சத்தியம் குடும்பத்தாருக்கு நிதியுதவி வழங்க அவருடன் பணியில் சேர்ந்த 1993-ம் ஆண்டு சக காவலர்கள் முன்வந்தனர். இதைதொடர்ந்து ரூ.1.70 லட்சம் நிதி திரட்டப்பட்டது. இந்த தொகை போதுமானதாக இல்லை என்பதால் தமிழகம் முழுவதும் 1993-ம் ஆண்டு சக பணியில் சேர்ந்த அனைத்து காவலர்களிடம் நிதி வசூலிக்கப்பட்டது. இதன் மூலம் கிடைத்த ரூ.4.40 லட்சத்துடன் ஏற்கெனவே திரட்டப்பட்ட நிதியை சேர்ந்த ரூ.6.10 லட்சத்தை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.விஜயகுமார் முன்னிலையில், சத்தியம் குடும்பத்தாரிடம் 1993-ம் ஆண்டு சக காவலர்கள் வழங்கினர்.

விபத்தில் காயமடைந்த சத்தியத்துக்கு ராஜலட்சுமி (45) என்ற மனைவியும், ஸ்ரீராம் (20) என்ற மகனும், மோகனப்பிரியா (18) என்ற மகளும் உள்ளனர். நிதியுதவி வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். விஜயகுமார் மற்றும் 1993-ம் ஆண்டு சக காவலர்களுக்கு சத்தியம் குடும்பத்தார் நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x