Published : 31 Jan 2021 03:15 AM
Last Updated : 31 Jan 2021 03:15 AM

மற்ற வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு: முதல்வர் தான் முடிவு செய்வார் அமைச்சர் செங்கோட்டையன் கருத்து

மற்ற வகுப்புகளுக்கு பள்ளி திறப்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார்.

சிவகங்கை அருகே சக்கந்தியில் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தியதற்கான விழா நடந்தது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கதர் கிராமத் தொழில்கள் நல வாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, முதன்மைக் கல்வி அலுவவலர் பாலுமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவுக்குப் பின் அமைச் சர் செங்கோட்டையன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

742 அடல் டிங்கரிங் லேப் திட்டம் அடுத்த மாத இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும். 7,500 ஸ்மார்ட் வகுப்புகள், 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்கள் வழங்க மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தனியார் பள்ளிகளைப் போன்று அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் ஷூ, சாக்ஸ் அணியும் திட்டம் செயல்படுத்தப்படும்.

காலத்துக்கு ஏற்ப ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை நீக்கிவிட்டோம். ஏற்கெனவே 7,100 உபரி ஆசிரியர்களாக உள்ளனர். அவர்களை காலிப் பணியிடங்களில் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு ரூ.1,400 கோடி நிதிச் சுமை ஏற்படும். சிலர் வழக்கு தொடர்ந்துள்ளதால் ஆசிரியர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டு ள்ளது. அவர்கள் ஒத்துழைத்தால் பிப்.13-ம் தேதிக்குள் பட்டியல் வெளியிட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும்.

மற்ற வகுப்புகளுக்கு பள்ளி திறப்பது குறித்து முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை நீக்கிய சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x