Published : 26 Jan 2021 03:18 AM
Last Updated : 26 Jan 2021 03:18 AM

3 மாதங்களாகியும் உடல் வராததால் சவுதி அரேபியாவில் இறந்தவரை அங்கேயே அடக்கம் செய்ய ஆட்சியரிடம் மனு

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை வளையர்வாடியைச் சேர்ந்த பெண், சவுதி அரேபியாவில் 3 மாதங்களுக்கு முன் விபத்தில் இறந்த தனது கணவரின் உடலை அங்கேயே அடக்கம் செய்துவிட்டு, குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தார்.

மண்டபம் அருகே வேதாளை வளையார்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்(40). இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் குவைத் நாட்டிற்கு கூலி வேலைக்குச் சென்றுள்ளார். செல்வத்தை அவரது உரிமையாளர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பணியாற்றிய செல்வம் கடந்த ஆண்டு நவம்பர் 4-ம் தேதி விபத்தில் இறந்துள்ளார். தகவல் அறிந்த செல்வத்தின் மனைவி விஜயராணி நவம்பர் 5-ம் தேதியே ராமநாதபுரம் ஆட்சியரிடம் தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரக்கோரி மனு அளித்தார். இதுவரை கணவரின் உடல் வராததாலும், இறந்து 3 மாதங்களுக்கு மேலாகிவிட்டதாலும், கணவரின் உடலை அங்கேயே அடக்கம் செய்துவிட்டு, குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நேற்று ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளித்தார்.

ஆட்சியர் ஏற்கனவே அளித்த மனுவின்படி இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் விபத்து வழக்கு விசாரணையில் உள்ளது. எனவே தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதுகுறித்து விஜயராணி கூறியதாவது, எனது கணவர் இறந்து 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அங்கேயே அடக்கம் செய்வதுதான் நல்லது. எங்களுக்கு சஸ்விதா(13) என்ற மகளும், நிவாஷ்(10) என்ற மகனும் உள்ளனர். அவர்களை படிக்க வைக்கவும், குடும்பத்தை நடத்தவும் சவுதி அரேபியாவிலிருந்து நிவாரணம் பெற்றுத்தர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x