Published : 25 Jan 2021 03:15 AM
Last Updated : 25 Jan 2021 03:15 AM

பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக நீலகிரியில் ‘ஸ்மார்ட் கேர்ள்’திட்டம் அறிமுகம்

உதகை

நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்கம் மற்றும் பாரதிய ஜெயின் சங்கம் சார்பில் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா மற்றும் ‘ஸ்மார்ட் கேர்ள்’ திட்ட அறிமுக விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி பேசும்போது, ‘‘தேசிய பெண் குழந்தைகள் தினம் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது. குறைந்துவரும் பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தருவதும் முக்கிய நோக்கமாக மத்திய அரசால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் மருத்துவ மனையின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது முடக்க காலத்தில் நமது மாவட்டத்தில் ஏராளமான போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இளம் பெண்கள் தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தைரியமாக செயல்பட வேண்டும். ‘ஸ்மார்ட் கேர்ள்’ என்ற திட்டம் மூலம் 12 முதல் 18 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு இரு நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி முகாமில் குழந்தைகள் உரிமைகள், பெண் குழந்தைகள் சார்ந்த பிரச்சினைகள், குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்கள், இளம் வயதில் ஏற்படும் பருவ மாற்றங்களை எதிர்கொள்வது, தன் சுத்தம், மாதவிடாய் பிரச்சினைகளை எதிர்கொள்வது, தன்னம்பிக்கை பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடத்தப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x