Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM
சென்னை வேளச்சேரியில் வனத் துறை தலைமையக கட்டிடப் பணிக்கு ரூ.9 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வனத் துறை செயலர் சந்தீப் சக்சேனா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், சென்னை வேளச்சேரியில் வனத் துறை தலைமையக கட்டிடம் கட்டுவதற்காக ரூ.30 கோடி ஒதுக்கி கடந்த 2019-ம் ஆண்டு ஜன.25-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து முதல்கட்டமாக அதில் ரூ.1 கோடி, அடிப்படை பணிகளுக்காக வழங்கப்பட்டது. அதன்பின், அதே ஆண்டு செப்.10-ம் தேதி கட்டுமானப்பணிக்காக ரூ.20 கோடி நிதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்.22 மற்றும் நவ.17-ம் தேதிகளில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், அரசுக்கு கடிதங்கள் எழுதியிருந்தார். அதில், பணிகளை இறுதி செய்வதற்கு மேலும் ரூ.9 கோடியே 30 லட்சத்து 36 ஆயிரம் நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்திருந்தார்.
இதைப் பரிசீலித்த தமிழக அரசு, முதல் கட்டமாக ரூ.9 கோடியை ஒதுக்க முடிவெடுத்துள்ளது. மீதமுள்ள ரூ.30 லட்சத்து 36 ஆயிரம் நிதி, அடுத்த நிதியாண்டில் பணிகளின் நிலை மற்றும் தேவை அடிப்படையில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT