தி.மலையை தலைமையிடமாக கொண்டு இந்து சமய அறநிலைய துறைஇணை ஆணையர் அலுவலகம் திறப்பு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்பு

தி.மலையில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தை திறந்து வைத்து பணி ஆணையை வழங்கிய அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன்.
தி.மலையில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தை திறந்து வைத்து பணி ஆணையை வழங்கிய அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன்.
Updated on
1 min read

தி.மலையை தலைமையிடமாக கொண்டு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகம் திறப்பு விழா தி.மலையில் நேற்று நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் 2020-21-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது விதி எண் 110-ன் கீழ் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ.9.50 கோடியில் 9 இணை ஆணையர் அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும் என முதல்வர் பழனி சாமி அறிவித்திருந்தார். ஒவ்வொரு அலுவலகத்துக்கும் 19 பணி யிடங்கள் உருவாக்கப்படும் எனவும் அறிவித்தார்.

அதன்படி, தி.மலையை தலைமை யிடமாக கொண்டு கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலையை உள்ளடக்கிய இணை ஆணையர் அலுவலகம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, திருவண்ணாமலையில் இணை ஆணையர் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். பின்னர் அவர், பணிகளுக்கான உத்தரவு ஆணைகளையும் வழங்கினார்.

திருவண்ணாமலை இணை ஆணையர் மண்டலத்தில் 255 கோயில்களும், திருவண்ணாமலை உதவி ஆணையர் பிரிவில் 1,127 கோயில்களும், கிருஷ்ணகிரி உதவி ஆணையர் பிரிவில் 1,284 கோயில்களும் உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பிரபாகர், ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அரவிந்த உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in