நாட்டுக்கோழிகள் வளர்க்கும் திட்டம் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

நாட்டுக்கோழிகள் வளர்க்கும் திட்டம் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

Published on

நாமக்கல் மாவட்டத்தில் நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வளர்க்கும் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம், என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப் பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் என்ஏடிபி திட்டத்தின் கீழ் 2020-21-ம் ஆண்டு ஒரு பயனாளிக்கு 1,000 நாட்டுக் கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் பயனாளிகள் தங்களது குடியிருப்பு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை தொடர்பு கொண்டு விண்ணப்பம் செய்யலாம்.

ஒரு கோழி குஞ்சு ரூ.30 வீதம் 1000 கோழிக்குஞ்சுகளுக்கான கொள்முதல் தொகை ரூ.30 ஆயிரமாகும். இதில், 50 சதவீதம் மானியம் என ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு கோழிக்குஞ்சு ஒன்றுக்கு 1.5 கி.கி. தீவனம் கொள்முதல் செய்ய ரூ.30 வீதம் 1,000 கோழிக்குஞ்சுகளுக்கு 50 சதவீதம் மானியமாக ரூ.22 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது. குஞ்சு பொரிப்பான் ஒன்று கொள்முதல் செய்ய ரூ.37, 500 மானியமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 2,500 ச.அ. நிலம் ஒரே இடத்தில் உள்ளவராக இருக்க வேண்டும். குறிப்பிடப்பட்ட கிராம ஊராட்சியில் நிரந்தர குடியிருப்பு உள்ளவராக இருக்க வேண்டும்.

கணவனை இழந்த கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுபாலினத்தோர், உடல் ஊனமுற்றோருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு கோழிப்பண்ணையை நிலைநிறுத்தி நடத்த வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in