பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ஒரு டன் குட்கா பறிமுதல் சரக்கு வாகன ஓட்டுநர் கைது

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ஒரு டன் குட்கா பறிமுதல் சரக்கு வாகன ஓட்டுநர் கைது

Published on

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் நடைபெற்ற வாகனத் தணிக்கையில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட தடை செய்யப்பட்ட ஒரு டன் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த வேன் ஓட்டுநரை கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் வழியாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சரக்கு வாகனங்களில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகள் கடத்தப்படுகின்றன. இதனை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவின்பேரில், பள்ளிகொண்டா காவல் துறையினர் இரவு நேரத்ங்களில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காவல் துறையினர் நேற்று அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சென்னை நோக்கிச் சென்ற சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்ததில் பெட்டி பெட்டியாக தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகள் இருந்தது. இதையடுத்து, சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் கிஷோர்குமார் (32) என்பவர் கைது செய்யப்பட்டார். சுமார் ஒரு டன் குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகள், சரக்கு வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவற்றை யாருக்காக கடத்திச் செல்லப்பட்டது குறித்து கிஷோர் குமாரிடம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in