Published : 06 Dec 2020 03:17 AM
Last Updated : 06 Dec 2020 03:17 AM

தூத்துக்குடியில் விடிய விடிய மழை கொட்டியது குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் தவிப்பு

புரெவி புயலின் தாக்கத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று முன்தினம் இரவில் விடிய விடிய மழை பெய்தது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

2-வது நாளாக மழை

வங்கக்கடலில் உருவான புரெவி புயல்காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மன்னார் வளைகுடா அருகே நிலை கொண்டிருந்தது. இதன் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று முன்தினம் இரவில் பரவலாக மழை பெய்தது. இரவு 7 மணிக்குதொடங்கிய மழை நேற்று அதிகாலை வரை நீடித்தது. நேற்று பகலிலும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.

மழையால் தூத்துக்குடி நகரில் தாழ்வான பகுதிகளான பிரையண்ட் நகர்,சிதம்பரநகர், மாசிலாமணிபுரம், தபால்தந்தி காலனி, ராஜீவ் நகர், லூர்தம்மாள்புரம், பூபாலராயர்புரம், ஜார்ஜ் சாலை உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. தெருக்களில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் திண்டாடினர்.

தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கி சகதிக் காடாகமாறியதால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாயினர். தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை 100-க்கும் மேற்பட்ட ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் உறிஞ்சி வெளியேற்றும் பணி மாநகராட்சி சார்பில் 24 மணி நேரமும் நடைபெறுகிறது. மோட்டார் பம்புகளை இயக்க முடியாத பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் உறிஞ்சி வெளியேற்றப்படுகிறது.

2 நாட்களாக பெய்த மழையால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், ஊருணிகளுக்கு தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து மன்னார் வளைகுடா அருகே நிலை கொண்டிருப்பதால் மழை மேலும் ஒருசில நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

143 மோட்டார் பம்புகள்

நிவாரணப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கூறியதாவது:

தூத்துக்குடி நகர பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் 143 மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்பணிக்காக மதுரை மாநகராட்சி மற்றும் திருச்சி மாநகராட்சியில் இருந்து 40 எச்பி திறன் கொண்ட தலா 10 மோட்டார்கள் கூடுதலாக கொண்டு வரப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாநகராட்சியின் 4 லாரிகள்,திருச்சி மாநகராட்சியின் 4 லாரிகள், வாடகை அடிப்படையில் 4 லாரிகள் எனமொத்தம் 12 டேங்கர் லாரிகள் மூலமும் மழைநீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சில இடங்களில் மழையால் சாய்ந்தமின் கம்பங்களை மின்வாரிய பணியாளர்கள் சரி செய்து வருகின்றனர். தூத்துக்குடிமாநகராட்சி மற்றும் காயல்பட்டினம் பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள 22 குடும்பங்கள் அழைத்து வரப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கபட்டுள்ளனர். மாவட்டம்முழுவதும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்):

திருச்செந்தூர் 69, குலசேகரன்பட்டினம் 55, விளாத்திகுளம் 33, காடல்குடி 14, வைப்பார் 63, சூரன்குடி 33, கோவில்பட்டி 35, கழுகுமலை 14, கயத்தாறு 47, கடம்பூர் 62, ஓட்டப்பிடாரம் 61, மணியாச்சி 48.4, வேடநத்தம் 35, கீழ அரசடி 21.7, எட்டயபுரம் 37, சாத்தான்குளம் 44, வைகுண்டம் 65.2, தூத்துக்குடி 89.3 மி.மீ. மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 108 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 49.19 மி.மீ. மழை பெய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x