Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

புதுவை காவல்துறை அதிகாரிகள் கைகள் கட்டப்பட்டுள்ளன மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் கண்ணன் கருத்து

புதுச்சேரியில் காவல் துறை அதிகாரிகள் கைகள் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் மக்களே சாலையில் இறங்கி போராட வேண்டிய அவசியம் ஏற்படும் என்று மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் எம்பியுமான கண்ணன் எச்சரித்துள்ளார்.

இதுபற்றி அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரியில் தினம் தினம் ஒரு வன்முறை வெறியாட்டம், பயங்கர கொலை முயற்சி, துடிக்கத் துடிக்க கொலைகள், கொள்ளைகள், தாய்மார்களின் செயின் பறிப்பு நடக்கிறது. பகிரங்கமாக அரசு மற்றும் தனியார் நில ஆக்கிரமிப்புக்குகள், வழிமறித்து அப்பாவி மக்களைத் தாக்குதல், வியாபாரிகளிடம் மாமூல் வேட்டை போன்ற செயல்கள் அன்றாட நடவடிக்கைகளாக நமது புதுச்சேரி மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

ஆட்சியில் இருப்பவர்கள் அறிக்கைகள் மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எந்த ஒரு மாற்றமும் அடிமட்டத்தில் ஏற்படவில்லை.

ஆளும் கட்சிக் காரர்களே உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று வெளியே சொல்லும் அவலம் இந்த ஊரில் தான் நடந்துகொண்டிருக்கிறது. சமூக விரோதிகள் யாரென்று அரசுக்குத் தெரியாதா? போலீஸ் துறைக்குத் தெரியாதா?

போலீஸ் துறை சுதந்திரமாக செயல்படவில்லை என சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. போலீஸ் துறை அதிகாரிகள் கைகள் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் மக்களே சாலையில் இறங்கி போராடவேண்டிய அவசியம் ஏற்படும். ஆளும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இதை எடுத்துச் செல்லவேண்டியது என்னைப் போன்றவர்களின் கடமை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்கள் என நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x