Published : 22 Nov 2020 03:16 AM
Last Updated : 22 Nov 2020 03:16 AM

யானை ஆராய்ச்சியாளர் அஜய் தேசாய் மறைவு: முதல்வர் இரங்கல்

யானைகள் ஆராய்ச்சியாளர் அஜய் தேசாய் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

யானைகள் ஆர்வலரும், ஆராய்ச்சியாளருமான அஜய் தேசாய் உடல் நலக்குறைவால் கடந்த நவ.20-ம் தேதி காலமானார். இதை முன்னிட்டு தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி:

முதல்வர் பழனிசாமி: அஜய் தேசாய் சர்வதேச இயற்கை நிதியத்தின் ஆலோசகராகவும், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றிய அமைப்பின் ஆலோசகராகவும், ஆசிய யானைகள் தொடர்பான மத்திய அரசின் சிறப்புக் குழு உறுப்பினராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். இவர் யானைகள் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு ஆய்வுக்கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.

அஜய் தேசாய் தமிழகத்தின் முதுமலை மற்றும் களக்காடு முண்டந்துறை வனவிலங்கு சரணாலயங்களில் யானைகள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். மேலும் இவர் யானைகள் குறித்த தகவல்களையும், ஆலோசனைகளையும் தமிழக வனத்துறைக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: யானைகள் ஆர்வலர் அஜய் தேசாய் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். மிகச் சிறந்த வன உயிரியல் பாதுகாப்பு நிபுணரை இந்தியா இழந்திருக்கிறது. அஜய் தேசாயை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சூழலியல் ஆர்வலர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல் களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x