ஆட்சியர் நிர்ணயம் செய்த ஊதியத்தை தினக்கூலி பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளாட்சித்துறை பணியாளர் சங்கம் கோரிக்கை

ஆட்சியர் நிர்ணயம் செய்த ஊதியத்தை தினக்கூலி பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளாட்சித்துறை பணியாளர் சங்கம் கோரிக்கை
Updated on
1 min read

மாநகராட்சியில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த ஊதியத்தை வழங்க வேண்டுமென ஈரோடு மாவட்ட உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு மாநகராட்சி ஆணையருக்கு, சங்கத்தின் தலைவர் எஸ்.சின்னசாமி அனுப்பியுள்ள மனு விவரம்:

ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றிவரும் தினக் கூலி மற்றும் பகுதிநேரப் பணி யாளர்களுக்கு ஆண்டுதோறும் விலைவாசி உயர்வு மற்றும் திறன் அடிப்படையில் மாவட்ட ஆட்சி யரால் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி, 2020- 21-ம் ஆண்டுக்கான ஈரோடு மாவட்ட குறைந்தபட்ச ஊதியத்தை செயல்முறை ஆணைகள் மூலம் மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்து அறிவித்துள் ளார். இந்த ஆணை அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் நிரந்தரமற்ற, தினக்கூலி தூய்மைப் பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.676 வீதமும், ஓட்டுநர்களுக்கு ரூ.714 வீதமும், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர்களுக்கு ரூ.753 வீதமும், கணினி ஆப்ரேட்டர்களுக்கு ரூ.791 வீதமும், வாட்ச்மேன், அலுவலக உதவியாளர், தோட்டவேலை மற்றும் மஸ்தூர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.676 வீதமும் ஊதியமாக வழங்கப்பட வேண்டும்.

எனவே, மாநகராட்சியில் பணியாற்றிவரும் அனைத்து தினக்கூலி மற்றும் பகுதிநேரப் பணியாளர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் இம்மாதம் வரையிலான நிலுவைத் தொகையுடன் ஊதிய உயர்வினை உடனடியாக வழங்கிட வேண்டுகிறோம், எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in