Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM

நாமக்கல் நகராட்சியுடன் இணைக்க வகுரம்பட்டி ஊராட்சி மக்கள் எதிர்ப்பு

நாமக்கல்

வகுரம்பட்டி ஊராட்சியை நாமக்கல் நகராட்சியுடன் இணைக்க வேண்டாம், என நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

நாமக்கல் நகராட்சியுடன் வகுரம்பட்டி ஊராட்சியை இணைப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இச்சூழலில் வகுரம்பட்டி ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மக்கள் மனு அளித்தனர். இந்த மனுவில் குறிப்பிடப்பட்ட விவரம்:

வகுரம்பட்டி ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பான்மையான மக்கள் விவசாயம் மற்றும் அதைச்சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திலும் மக்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். இச்சூழலில் நகராட்சியுடன் வகுரம்பட்டி ஊராட்சியை இணைக்கும் பட்சத்தில் சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்டவை அதிகரிக்கும். இதனால், மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாவர்.

கிராம ஊராட்சியாக இருப்பதால் அரசின் பல்வேறு நிதியுதவி திட்டங்களை பெற ஏதுவாக உள்ளது. நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் அனைத்து நிதியுதவியும் இழக்க நேரிடும். இதனால், மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாவர். எனவே, வகுரம்பட்டி ஊராட்சியை, நாமக்கல் நகராட்சியுடன் இணைக்க வேண்டாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x