Published : 17 Dec 2021 03:08 AM
Last Updated : 17 Dec 2021 03:08 AM

திருப்பத்தூரை தொடர்ந்து மற்ற 11 ஒன்றியங்களிலும் - மாற்றுத் திறனாளிகளுக்கு விரைவில் தேசிய அடையாள அட்டை : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்

திருப்பத்தூரை தொடர்ந்து மற்ற 11 ஒன்றியங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

திருப்பத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

மாற்றுத் திறனாளிகள் மாவட்ட அலுவலகத்துக்கு அலைவதை தவிர்க்க, வட்டார அளவில் சிறப்பு முகாம்கள் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூரை தொடர்ந்து மற்ற 11 ஒன்றியங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்கும். மாவட்டத்தில் 34,018 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

வருவாய்த் துறை மூலம் 25 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணை, 15 பேருக்கு தேசிய நல வாரிய அட்டை, 6 பேருக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் காமாட்சி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x