Published : 17 Dec 2021 03:09 AM
Last Updated : 17 Dec 2021 03:09 AM

கோவில்பட்டியில் 11-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி தொடக்கம் :

கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் 11- வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் நேற்று தொடங்கின.

தொடக்க விழாவுக்கு கனிமொழி எம்.பி. தலைமை வகித்தார். சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், எம்எல்ஏ ஜீ.வி.மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், எஸ்.பி. ஜெயக்குமார், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜே.மனோகரன், 11-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி தலைவர் செல்லத்துரை அப்துல்லா, கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரனின் தந்தை சக்திவேல், தாய் மாரீஸ்வரி, தம்பி மகாராஜா ஆகியோரை கனிமொழி எம்.பி. கவுரவித்தார். ஹாக்கி இந்தியா தலைவர் ஞானேந்திர நிம்ஹோம் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

முதல் நாளான நேற்று நடந்த முதல் போட்டியில் ஹரியானா மற்றும் தெலங்கானா அணிகள் மோதின. ஹரியானா அணி 12 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் வங்காள அணியை எதிர்த்து விளையாட வேண்டிய திரிபுரா அணி வராததால், வங்காள அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

3-வது ஆட்டத்தில் சண்டிகர் அணியும் ஆந்திரா அணியும் மோதின. இதில் 23 - 0 என்ற கோல் கணக்கில் சண்டிகர் அணி வெற்றி பெற்றது. 4-வது போட்டியில் கர்நாடகா அணியுடன் மிசோராம் அணி மோதியது. இதில், 24 - 0 என்ற கோல் கணக்கில் கர்நாடக அணி வெற்றி பெற்றது.

5-வது ஆட்டத்தில் மகாராஷ்டிரா அணியுடன் மோத வேண்டிய அருணாச்சலப்பிரதேச அணி வராததால் மகாராஷ்டிரா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 6-வது ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன் கேரளா அணி மோதியது.

போட்டியில் மொத்தம் 27 அணிகள் பங்கேற்கின்றன. இவை 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் 8 அணிகள் காலிறுதி போட்டியில் மோதும். காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x