மனைவி தற்கொலை வழக்கில் கணவர், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை :

மனைவி தற்கொலை வழக்கில் கணவர், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை :
Updated on
1 min read

சாமல்பட்டியில் மனைவி தற்கொலை செய்த வழக்கில் கணவர், மாமியாருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக் (29). இவருக்கும் ராயக் கோட்டையைச் சேர்ந்த முருகன் மகள் பிரியங்கா (22) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி சாமல்பட்டியில் உள்ள தனது கணவர் வீட்டில் பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுதொடர்பாக சாமல்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கார்த்திக், மாமியார் மாதேஸ்வரி ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி லதா தீர்ப்பு வழங்கினார். அதில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய குற்றத்துக்காக 2 வருட சிறைத்தண்டனையும், வரதட்சணை கொடுமையால் மரணம் அடையச் செய்த குற்றத்துக்காக 10 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.6 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும். இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். இதையடுத்து கார்த்திக் மற்றும் மாதேஸ்வரி ஆகியோரை போலீஸார், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in