Published : 16 Dec 2021 03:07 AM
Last Updated : 16 Dec 2021 03:07 AM

ஊராட்சி செயலர்களை கண்டித்து - ஒன்றிய அலுவலகத்தை துணை தலைவர்கள் முற்றுகை :

சிவகங்கை மாவட்டம், காளை யார்கோவில் ஒன்றியத்தில் ஊராட்சி செயலர்களை கண்டித்து ஒன்றிய அலுவலகத்தை ஊராட்சித் துணைத் தலைவர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

காளையார்கோவில் ஒன்றியத்தில் 43 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஒன்றியத்தில் ஏற்கெனவே ஊராட்சித் தலைவர்களுக்கும், ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் இடையே பணிகளை மேற்கொள்வதில் அடிக்கடி மோதல் போக்கு இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ஊராட்சித் துணைத் தலைவர்கள் கூட்டமைப்பினர் அதன் தலைவர் மகேந்திரபிரபு, செயலாளர் சிவசண்முகம், பொருளாளர் முத்துலட்சுமி தலைமையில் காளையார்கோவில் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து பிடிஓ (கிராம ஊராட்சி) சத்யனிடம் மனு கொடுத்தனர். அவர் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் ததும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து ஊராட்சி துணைத் தலைவர்கள் கூறியதாவது:

வளர்ச்சித் திட்டங்கள் குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. குறிப்பிட்ட காலங்களில் ஊராட்சித் தலைவர்கள் ஊராட்சி கூட்டங்களை நடத்துவது இல்லை.

ஊராட்சிக் கூட்டங்கள், கிராம சபைக் கூட்டங்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே அஜண்டா கொடுக்க வேண்டும். ஆனால், கூட்டம் நடக்கும்போதே தீர்மானம் குறித்து தகவல் தெரிவிக்கின்றனர்.

தேசிய வேலையுறுதித் திட்ட விதிகள் குறித்து அதிகாரிகள் எங் களை குழப்புகின்றனர். அதனால் அச்சட்டம் குறித்து முறையாக எங்களுக்கு விளக்க வேண்டும். ஊராட்சிகளில் பணிகளை தேர்வு செய்யும்போது தீர்மான நகலின் மீது எங்களிடமும் ஒப்புதல் பெற வேண்டும். 14 மற்றும் 15-வது நிதிக்குழு மானியத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு ஒப்புதல் கொடுக்க எங்களுக்கு ‘டிசி’ கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த கார்டுகளை ஊராட்சி செயலர்களே பயன்படுத்துகின்றனர். அந்த கார்டுகளை எங்களுக்கு வழங்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் ஊராட்சி செயலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x