Published : 14 Dec 2021 03:09 AM
Last Updated : 14 Dec 2021 03:09 AM

கரூரில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் - மனு கொடுத்த மாற்றுத்திறனாளிக்கு உடனே வீடு ஒதுக்கீடு செய்த ஆட்சியர் :

மக்கள் குறைதீர் கூட்டத்தில் வீடு கேட்டு மனு வழங்கிய மாற்றுத் திறனாளிக்கு உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 620 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில், மாற்றுத்திறனாளி சரவணன், தனது மகன், மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில், சொந்த வீடு கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இதையடுத்து அவரது மனுவை பரிசீலித்த ஆட்சியர் பிரபுசங்கர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் அவருக்கு உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை சரவணனிடம் வழங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலு வலர் எம்.லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ப.மந்திராச்சலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) கண்ணன் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x