Published : 12 Dec 2021 03:09 AM
Last Updated : 12 Dec 2021 03:09 AM

செங்கல்பட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி :

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தைமுன்னிட்டு செங்கல்பட்டில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 61.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பங்கேற்று 59 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மின்கலனால் இயக்கப்படும் சக்கர நாற்காலி, பிரெய்லி ரீடர் என ரூ.61 லட்சத்து 60 ஆயிரத்து 854 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களான கல்வி, திருமணம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் ஈமச்சடங்கு மற்றும் ஓய்வூதியம் உட்பட ரூ.60 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

இதில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெ.செந்தில்குமாரி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சோழிங்கநல்லூர் அரவிந்த் ரமேஷ், திருப்போரூர் எஸ்.எஸ்.பாலாஜி, செங்கல்பட்டு வரலட்சுமி, பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாவட்ட ஊராட்சி பெருந்தலைவர் செம்பருத்தி, அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x