Published : 12 Dec 2021 03:10 AM
Last Updated : 12 Dec 2021 03:10 AM

பரமக்குடி அருகே பஸ்ஸில் வெட்டுப்பட்ட இளைஞர் மரணம் : 6 பேர் கும்பலை தேடும் போலீஸார்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கடந்த 2019-ம் ஆண்டு ஒரு கும்பல் கொலை செய்தது. இந்த கொலை வழக்கு விசாரணைக்காக மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பழனிகுமார் (19), வழிவிட்டான் (18), அழகு முருகன் (18), முத்து முருகன் (18), பழனிகுமாரின் தந்தை தர்மலிங்கம் ஆகியோர் ராமநாதபுரம் சிறார் மற்றும் இளைஞர் நீதிக்குழுமத்தில் நேற்று முன்தினம் ஆஜராகினர். இக்கொலை நடந்தபோது இவர்களில் தர்மலிங்கம் தவிர மற்ற 4 பேரும் சிறார்களாக இருந்துள்ளனர்.

விசாரணைக்குப் பின் ராமநாதபுரத்திலிருந்து அரசுப் பேருந்தில் மதுரைக்குச் சென்றபோது, பரமக்குடியை அடுத்த கமுதக்குடி என்ற இடத்தில் பேருந்தை வழிமறித்து ஏறிய 6 பேர் கும்பல், பழனிக்குமார் உள்ளிட்ட 4 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது. பரமக்குடியில் முதலுதவிக்குப்பின் மதுரை அரசு மருத்துவமனையில் 4 பேர் சேர்க்கப்பட்டனர். இதில் அழகுமுருகன் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இதையடுத்து பரமக்குடி நகர் போலீஸார் கொலை வழக்காக பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மணிகண்டன் தரப்புக்கும், தற்போது கொலையான அழகுமுருகன் தரப்புக்கும் ஏற்கெனவே பல்வேறு மோதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் சிலர் கொல்லப்பட்டுள்ளதன் தொடர்ச்சியாகவே பழிவாங்கும் வகையில் மேலும் ஒரு கொலை தற்போது நடந்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x