Published : 10 Dec 2021 03:09 AM
Last Updated : 10 Dec 2021 03:09 AM

ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது :

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் சுவிதா. இவரது கணவர் கணேஷ். இவர், கோவை அடுத்த குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட தனிப்படை காவல் துறையினர் கைது செய்ய சில நாட்களுக்கு முன்பு ஆம்பூர் வந்தனர்.

ஆம்பூர் அடுத்த எல்.மாங்குப்பத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த கணேஷை, காவல் துறையினர் கைது செய்து கை விலங்கிட்டு காரில் ஏற்றி செல்ல முயன்ற போது, அவரது ஆதரவாளர்கள் காவலர்களை தாக்கிவிட்டு கணேஷை மீட்டு சென்றனர்.

இது குறித்து கோவை காவல் துறையினர் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கணேஷை காவல் துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவான கணேஷ் ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் கிராமத்தில் பதுங்கியிருப்பது காவல் துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற உமராபாத் காவல் துறையினர் கணேஷை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x