Last Updated : 09 Dec, 2021 03:07 AM

 

Published : 09 Dec 2021 03:07 AM
Last Updated : 09 Dec 2021 03:07 AM

சேலத்தில் அரிய வகையைச் சேர்ந்த - கல் கவுதாரி, பெரிய கருப்பு உழவாரன் பறவைகள் வலம் : கணக்கெடுப்பு பணியின்போது கண்டறியப்பட்டன

கல் கவுதாரி

சேலம்

சேலம் மாவட்டத்தில் கல் கவுதாரி மற்றும் பெரிய கருப்பு உழவாரன் ஆகிய இரு அரிய வகை பறவைகள் இருப்பது ஆசிய நீர்நிலைப் பறவைகள் கணக்கெடுப்பின்போது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் சர்வதேச பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டுமுதல் ஆசிய நீர்நிலைப் பறவைகள் தொடர்பான கணக்கெடுப்புப் பணி நடந்து வருகிறது. சேலம் பறவையியல் கழகம் சார்பில் மாவட்டம் முழுவதும் 265 நீர்நிலைகளில் பறவை இனங்கள் கணக்கெடுத்து, பதிவு செய்யப்பட்டதில், அரிய வகை பறவைகள் இரண்டு கண்டறியப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக சேலம் பறவையியல் கழக இயக்குநர் கணேஷ்வர் கூறியதாவது:

ஆசிய நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு பணி மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள பறவை இனங்களை கண்டறியப்பட்டு பதிவு செய்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறோம். கடந்த 2020-ம் ஆண்டு 52 நீர்நிலைகளில் 121 பறவை இனங்களும், நடப்பாண்டு 265 நீர்நிலைகளில் 168 பறவையினங்களும், மாவட்டம் முழுவதும் 25,479 பறவைகளும் பதிவு செய்துள்ளோம்.

நடப்பாண்டு கணக்கெடுப்பின்போது, அரிய வகை இரு பறவைகள் கண்டறியப்பட்டன. இதில், இமயமலை அடிவாரத்தில் காணக்கூடிய பெரிய கருப்பு உழவாரன், தென் தமிழகத்தில் கணக்கூடிய கல்கவுதாரி பறவைகள் இருப்பது முதல் முறையாக தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் வரும் 2022-ம் ஆண்டு ஆசிய நீர்ப் பறவைகள் கணக்கெடுப்பு பணியின்போது, 300 நீர்நிலைகளில் பறவையினங்களை கண்டறிந்து, ஆவணப்படுத்த முயற்சி எடுக்கப்படும். இதன் மூலம் பறவையினங்கள் வாழத் தேவையான சூழலை உருவாக்குவதும், அவற்றின் உணவு தேவையை பூர்த்தி செய்தல், நீர்நிலைகளை மேம்படுத்தல், பல்லுயிர் பெருக்கத்தை முன்னெடுத்து செல்லுதல் உள்ளிட்ட முக்கிய கருத்துருக்களை அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பித்து இயற்கை வாழ்விட அபிவிருத்தி பணியை மேற்கொள்ளவுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகளின் தோழன்

கல் கவுதாரி பறவைகள் அகண்ட புதர்காடுகள், திறந்தவெளி புல்வெளிகள், கற்கள் நிரம்பிய பகுதிகளில் காணப்படும். கற்களின் நிறத்தை ஒத்து இருக்கும்.

இவை கற்களுக்கு இடையே தரையில் முட்டையிட்டு, குஞ்சு பொறிக்கக்கூடியது. இவைகளுக்கு கூடு கட்டத் தெரியாது. இரைகொல்லி விலங்குகளும், கொன்னுண்ணி பறவைகளிடம் இருந்து மறைந்து வாழ கற்கள் நிறைந்த பகுதிகளையே பெரும்பாலும் இருப்பிடமாக கொண்டிருக்கும். இவை 33 செமீ வரை வளரக்கூடியது. இப்பறவை கெங்கவல்லி பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கண்டறியப்பட்டுள்ளன.

அதேபோல, பெரிய கருப்பு உழவாரன் பறவை இமயமலை அடிவாரத்தில் காணக்கூடிய மிகச் சிறிய பறவையாகும். இப்பறவை ஓமலூர் நீர்நிலை பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் அரிய வகையான இப்பறவை 20 செமீ வளரக்கூடியது. தட்பவெப்ப நிலை மற்றும் உணவு தேவைக்காக இவை சேலத்துக்கு வலசை வந்துள்ளது. இப்பறவை முதுகில் வெள்ளை நிறத்துடனும், வால் பிளவு பட்டும் காணப்படும். பூச்சிகளை அதிகம் விரும்பி உண்ணக்கூடியது. வயல்வெளிகளில் பயிர்களை தாக்கும் பூச்சிகளை இவை உணவாக உட்கொள்ளும். எனவே, இப்பறவை உழவனின் தோழன் எனக் கூறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x