Published : 07 Dec 2021 03:07 AM
Last Updated : 07 Dec 2021 03:07 AM

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை : ஆட்சியர் அலுவலக குடியிருப்புப் பகுதியில் அதிகபட்சமாக 87.20 மி.மீ. பதிவு

திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. மாநகரின் பல்வேறு இடங்களில் குளம்போல மழைநீர் தேங்கியது. திருப்பூர் கொடிக்கம்பம் வ.உ.சி. நகர் 5-வது வீதியில் மழைநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். அதேபோல தோட்டத்துப்பகுதியிலும், மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது.

இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘திருப்பூர் மாநகரில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது, மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போர்க்கால அடிப்படையில், மழைநீரை வெளியேற்றவும், இப்பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

மழை அளவு (மி.மீ.)

திருப்பூர் ஆட்சியர் அலுவலக குடியிருப்புப் பகுதி 87.20, உடுமலை 72, திருப்பூர் வடக்கு 50, தெற்கு 48, பல்லடம் 42, மடத்துக்குளம் 31, ஊத்துக்குளி 14, காங்கயம் 12.20, திருமூர்த்தி அணை 10, அவிநாசி 8, குண்டடம் 4, அமராவதி அணை 4, திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் 28 மி.மீட்டர் மழை பதிவானது

நிரம்பிய 100 ஏக்கர் குளம்

உடுமலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த கன மழையால், கண்ணம்மநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள 100 ஏக்கர் பரப்பிலான குளம் நிரம்பியது. மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்தும் குளத்துக்கு தண்ணீர் வரத்து இருந்ததால், உபரி நீர் வெளியேறி அருகே உள்ள ஓடையை நோக்கி பாய்ந்தது. இதன் இடைப்பட்ட பகுதியில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

கூலி தொழிலாளர்கள் வசிக்கும் நேரு நகர் குடியிருப்பையும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, அருகே உள்ள பள்ளி கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சி.மகேந்திரன் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினார். மேற்கண்ட கிராமத்தில் வட்டாட்சியர் ராமலிங்கம் தலைமையிலான வருவாய் துறையினர் முகாமிட்டு, தேவையான ஏற்பாடுகளை செய்தனர்.

இதில், மழை நீர் செல்லும் பாதையை ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பகுதிகள் பொக்லைன் இயந்திரம் மூலமாக உடனடியாக அகற்றப்பட்டன.

உடுமலை நகர் ராஜேந்திரா சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதே வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலகமும், கேந்திரியா வித்யாலயா பள்ளியும் இயங்குகின்றன. இந்த வளாகத்திலும் மழைநீர் தேங்கி, கட்டிடங்களை சுற்றிலும் குளமாக காணப்படுகிறது. நேற்று அலுவலகத்துக்கு வந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளே செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x