Published : 06 Dec 2021 03:08 AM
Last Updated : 06 Dec 2021 03:08 AM

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வில் - வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்பதை தடுத்து நிறுத்த வேண்டும் : தமிழ்நாடு அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

தமிழ்நாட்டில் காலியாக உள்ள பாலி டெக்னிக் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்காக தேர்வில் வெளிமாநிலத் தவர்கள் பங்கேற்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு வரும் 8- ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு இதே பணியி டங்களுக்காக நடந்த தேர்வில், தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர் பெருமளவில் தேர்வானதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி அம்பலப்படுத்தியதோடு, வெளி மாநிலத்தவரை நீக்கிவிட்டு புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து வெற்றி பெற்றோருக்கு 2017 நவம்பர் 23ம் தேதி அன்று நடக்கவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பை தமிழ்நாடு அரசு ஒத்தி வைத்தது. இவ்விவகாரத்தில் சென்னைஉயர் நீதிமன்றம் தலையிட்ட பின்னர், அத் தேர்வை ரத்து செய்ததுடன் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கரோனா முடக்கம் காரணமாக கடந்தஇரண்டாண்டுகளாக நடைபெறாத அத்தேர்வு, வரும் 8-ம் தேதி முதல் 12 ம்தேதி வரை நடைபெறுகிறது. வெளிமாநிலத்தவர் பங்கேற்பால் ஏற்கெனவே ரத்தாகி, இரண்டாம் முறையாக நடைபெறும் அத்தேர்வில் மீண்டும் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது மிகவும் வேதனையளிக்கிறது. வெளி மாநிலத்தவர்கள் அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகத் தேர்வானால், கிராமப்புறங் களில் தமிழ்வழியில் படித்துவிட்டு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேரும் தமிழ் மாணவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவர். தமிழ் மாணவர்களின் வேலை வாய்ப்பும் பறிபோகும்.

தற்போது, தமிழ்நாட்டின் அனைத்து நிலை போட்டி தேர்வுகளுக்கும் தமிழ் மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த அரசாணை வரும் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்விற்கும் பொருந்தும் வகையில் வழிவகுக்க வேண்டும்.

இதற்கான அறிவிப்பாணையை தேர்வுக்கு முன்னர் வெளியிட வேண்டும். இத்தேர்வில் வெளி மாநிலத்தவர் பங்கேற்பதைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழ் மாணவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவர். வேலை வாய்ப்பும் பறிபோகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x