Published : 04 Dec 2021 03:08 AM
Last Updated : 04 Dec 2021 03:08 AM

ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அழைப்பு :

நீலகிரி மாவட்டத்தில் 100 சத மானியத்தில் ஆடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ச.பா.அம்ரித் தெரிவித்துள்ளதாவது:

2021-22-ம் ஆண்டுக்கு ஊரக பகுதிகளில் வசிக்கும் ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சத மானியத்தில் 5 வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம் ரூ.76.63 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 100 பயனாளிகள் வீதம் தமிழகத்தில் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களில் 38,800 பெண் பயனாளிகளுக்கு 1.94 லட்சம் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கப்பட உள்ளன.

இதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 400 பயனாளிகளுக்கு தலா 5 வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வீதம் 2,000 ஆடுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பயனாளிகளிடமிருந்து டிசம்பர் 9-ம் தேதிவரை விண்ணப்பங்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கான திட்டம் என்பதால் பயனாளி 60 வயதுக்கு உட்பட்டவராகவும், சொந்தமாக நிலம் மற்றும் கால்நடைகள் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுத் துறை அல்லது உதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றுபவராகவும், கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள், கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன் பெற்றவராகவும் இருக்கக் கூடாது.

இத்திட்டத்துக்கான விண்ணப்பத்தை அவரவர் பகுதியின் அருகாமையிலுள்ள கால்நடை மருந்தகங்களில் இருந்து பெற்று, பூர்த்தி செய்து தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x