Published : 04 Dec 2021 03:11 AM
Last Updated : 04 Dec 2021 03:11 AM

கருங்குளம் ஒன்றியத்தில் 40 நாட்களாக செயல்படாத கூட்டுக்குடிநீர் திட்டம் : 120 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் கருங்குளம் கூட்டு குடிநீர் திட்டம் 1998-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்காக முறப்பநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் நீர் உறிஞ்சு கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கப்படுகிறது. கருங்குளம் ஒன்றியத்தின் கீழ் பகுதியில் உள்ள 60 கிராமங்களுக்கு அகரத்தில் இருந்தும், மேல் பகுதியில் உள்ள 60 கிராமங்களுக்கு முறப்பநாட்டில் இருந்தும்குடிநீர் விநயோகம் செய்யப்படுகிறது. இதற்காக பல இடங்களில்நீரேற்றும் நிலையங்கள் அமைக்கப் பட்டு மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை பராமரிக்க அதிகாரிகளும், ஒவ்வொரு இடத்திலும் தண்ணீர் திறக்க ஆபரேட்டர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த திட்டம் தொடங்கப்பட்டு 24 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் முறையான பராமரிப்பு பணிகள் இல்லாமல் திட்டம் சரியாக செயல்படாமல் உள்ளது. தற்போது கடந்த 40 நாட்களாக இந்தகூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படவில்லை. இதனால் 120 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்த திட்டத்தை முறையாக பராமரித்து செயல்படுத்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x