Published : 03 Dec 2021 03:08 AM
Last Updated : 03 Dec 2021 03:08 AM

செஞ்சி அருகே சிட்டாம்பூண்டி கிராம எல்லையில் - முஸ்லிம்களின் இடுகாடு இடிக்கப்பட்டதாக தர்ணா போராட்டம் :

செஞ்சி அருகே முஸ்லிம்களின் இடுகாடு இடிக்கப்பட்டதாக தர்ணா போராட்டம் நடைபெற்றது.

செஞ்சி அருகே சிட்டாம்பூண்டி கிராம எல்லையில் பழமை வாய்ந்த தர்கா உள்ளது. இதன் அருகில் முஸ்லீம்களின் இடுகாடு உள்ளது. இந்நிலையில் இந்த இடத்தில் உள்ள சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் தமிழக அரசு சார்பில் கலைக்கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

தற்போது இந்த இடத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கு முஸ்லிம்களின் குடியிருப்பு மற்றும் இடுகாட்டையும் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் வருவாய்த் துறையினர் சீர் செய்து சமன் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முஸ்லிம்கள் தர்கா முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தகவல் அறிந்து வந்த அனந்தபுரம் போலீஸார் முஸ்லிம்களிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் கூறுகையில், "இங்கு அரசு கலைக்கல்லூரி கட்ட எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் முஸ்லிம்களுக்கான இடுகாடு 60 சென்ட் இடம் இங்கு உள்ளது.

இந்த இடத்தில் சுமார் 70 கல்லறைகளும் உள்ளன. இந்நிலையில் திடீரென வருவாய்த் துறையினர் இந்த இடத்தில் உள்ள கல்லறைகளை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர்.

கல்லறையை இடித்தவர்களை கைது செய்யக்கோரி அனந்தபுரம் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளோம். நடவ டிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம் தொடரும்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x