Published : 01 Dec 2021 06:40 AM
Last Updated : 01 Dec 2021 06:40 AM

வேலூர் அருகே சாலை தடுப்பில் தனியார் பேருந்து மோதி விபத்து : படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் படுகாயம்

வேலூர் அருகே சாலையில் இருந்த இரும்பு தடுப்புகள் மீது பேருந்து விபத்துக்குள்ளானதில், படியில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

வேலூரில் இருந்து ஆற்காடு நோக்கி தனியார் பேருந்து நேற்று நேற்று காலை புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் பயணித்தனர். சிலர் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

வேலூர் அடுத்த பெருமுகை ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி எதிரே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து இடது புறமாக சர்வீஸ் சாலையை ஒட்டியுள்ள இரும்புத் தடுப்புகள் மீது பயங்கரமாக மோதியதோடு, சுமார் 50 மீட்டருக்கு மேல் இரும்பு தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்று நின்றது. இதில், படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள் மற்றும் பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

பேருந்து இரும்பு தகடுகள் மீது மோதிய வேகத்தில் மாணவர்கள், பயணிகள் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப்பணிகளை துரிதப்படுத்தினர். உடனடியாக 5-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டன.

விபத்தில் பலத்த காயமடைந்த 2 பேர் உடனடியாக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் 11 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.

இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் 8-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதில், 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x