Published : 01 Dec 2021 06:40 AM
Last Updated : 01 Dec 2021 06:40 AM

நெமிலி மற்றும் ஆம்பூரில் - ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இருவரது உடல்கள் மீட்பு : காவல் துறையினர் விசாரணை

நெமிலி மற்றும் ஆம்பூரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவர் உட்பட இருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி திருநாவுக்கரசு. இவரது மகன் சரவணன் (15). இவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை வேடிக்கை பார்க்க சரவணன் நேற்று முன்தினம் அங்கு சென்றார்.

அப்போது, அவர் ஆற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. ஆற்று நீரில் அடித்துச்செல்லப்பட்ட சரவணனை அரக்கோணம் தீயணைப்புத்துறையினர் நேற்று முன்தினம் இரவு வரை தேடினர். இரவில் இருள் சூழ்ந்ததால் தேடும் பணி கைவிடப்பட்டது.

இதையடுத்து, நேற்று காலை 7 மணியளவில் மீண்டும் தேடும் பணிகள் தொடங்கின. இந்நிலையில், ஆற்று நீரில் அடித்துச்செல்லப்பட்ட மாணவர் சரவணன் உடல் உயிரிழந்த நிலையில் நேற்று காலை மீட்கப்பட்டது. அவரது உடலை கைப்பற்றிய நெமிலி காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் பாங்கிஷாப் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பழனி(51). இவர், நேற்று பிற்பகல் எல்மாங்குப்பத்தில் இருந்து ஆம்பூர் பஜார் பகுதிக்கு வர அங்குள்ள தரைப்பாலத்தை கடக்க முயன்றார். அப்போது தவறி அவர் ஆற்றில் விழுந்தார். இந்த தகவலறிந்த ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி பழனியை உயிரிழந்த நிலையில் மீட்டனர்.

இது குறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x