Published : 27 Nov 2021 03:09 AM
Last Updated : 27 Nov 2021 03:09 AM
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.165.55 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தில் ஏ-கஸ்பா பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஏ-கஸ்பா பகுதி மக்களின் கருத்துக்களை கேட்டறியும் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி ஆணையாளர் ஷகீலா தலைமை வகித்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் ராம்சாகர் முன்னிலை வகித்தார். நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.
கூட்டம் தொடங்கியதும் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட ஏ-கஸ்பா பகுதியில் பாதாள சாக்கடைத்திட்டத்தின் கீழ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதன் மூலம் எந்தவித பாதிப்பும் இப்பகுதி மக்களுக்கு ஏற்படாது என்பது உறுதி. வருங்கால சந்ததியினர் குறித்து நாம் அனைவரும் ஆலோசனை மேற்கொண்டு இத்திட்டப்பணிகள் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஏ-கஸ்பா பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குடியிருப்புப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் பல்வேறு பிரச்சினைகள் எழும். எனவே, மக்கள் வசிக்காத பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்ய முயன்றபோது பொதுமக்களுக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, கூட்டம் நடத்தப்படாமல் மறு தேதிக்கு தள்ளி வைப்பதாக நகராட்சி ஆணையாளர் ஷகீலா அறிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
பிறகு, ஏ-கஸ்பா பகுதியில் நகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதின் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப் புணர்வு ஏற்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT