Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க - தமிழகத்தில் 3.60 கோடி பேர் பயனடைந்துள்ளனர் : மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தகவல்

மத்திய அரசின் முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க

தமிழகத்தில் 3.60 கோடி பேர் பயனடைந்துள்ளனர் என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.

வேலூரில் முதியோர்களுக் கான விழிப்புணர்வு உதவி எண்மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு உதவி எண்ணை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, சமூக நலத்துறை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் முத்ரா யோஜனா திட்டத்தில் தொழில் தொடங்க கடன் பெற்று, கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை 3 கோடியே 60 லட்சத்து 54 ஆயிரம் நபர்கள் பயனடைந் துள்ளனர்.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை கிராமப்புறங்களில் 5 லட்சத்து 60 ஆயிரம் நபர்களுக்கும், நகர்புறங்களில் 4 லட்சத்து 42 ஆயிரம் நபர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

அரசு சிறுபான்மை இன மக்களுக்கு ஆதரவாக உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 5ஏக்கர் நிலங்களை வழங்க வேண்டும். அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். கல்வி,வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது. அனைவருக்கும் சமமான இட ஒதுக்கீடு அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது’’ என்றார்.

பின்னர், நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x