Published : 24 Nov 2021 03:10 AM
Last Updated : 24 Nov 2021 03:10 AM

வார்டு மறுவரையறையில் குளறுபடி - காயல்பட்டினத்தில் கடையடைப்பு :

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சியில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள், குழப்பங்கள் இருப்பதாக மக்கள் புகார்தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஒரே தெருவை மூன்று பகுதிகளாக பிரித்து வெவ்வேறு வார்டுகளுடன் இணைத்து வார்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஓரளவு சமமான மக்கள்தொகை அடிப்படையில் அனைத்து வார்டுகளையும் மறுசீரமைப்பு செய்யாமல், பெரும் ஏற்ற இறக்கத்துடன் வார்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை சரி செய்ய வலியுறுத்திமக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு, நடப்பது என்ன குழு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை உள்ளிட்ட பொதுநல அமைப்புகள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், குளறுபடியான வார்டுகள் அடிப்படையில் நடத்தப்படும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பு நடத்த உள்ளதாக '2017-ம் ஆண்டு வார்டு வரையறை எதிர்ப்புக் குழு' அறிவித்தது.

அதன்படி, காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் வியாபாரிகள் முழு கடையடைப்பு நடத்தினர். மருந்துக் கடைகளைத் தவிர அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. மேலும் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மாலையில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரளானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x