Published : 23 Nov 2021 03:06 AM
Last Updated : 23 Nov 2021 03:06 AM
உதகை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாட்டில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான் மற்றும் கனகராஜ் ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதில், கார் விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். சயான் மற்றும் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் போலீஸார் மறுவிசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பான சாட்சியங்களை கலைத்ததாக, தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி மாவட்ட காவல்துறையினர் கடந்த மாதம் 25-ம் தேதி கைது செய்தனர். இருவரையும் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வந்தனர்.
நீதிமன்ற காவல் முடிந்ததை அடுத்து உதகை மாவட்ட நீதிமன்றத்தில் இருவரையும் போலீஸார் ஆஜர்படுத்தினர். டிசம்பர் 6-ம் தேதி வரை இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் கூடலூர் கிளை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
ஜாமீன் மனு தாக்கல்: தனபால், ரமேஷின் ஜாமீன் மனுக்கள் நீதிமன்றத்தில் தள்ளுபடியான நிலையில், மீண்டும் இருவரது தரப்பிலும் வழக்கறிஞர் ராஜசேகர், உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார். மனுக்கள் மீதான விசாரணை வரும் 26-ம் தேதி கோடநாடு வழக்கு விசாரணையின்போது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT