Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM

நூல் விலையை குறைக்க வலியுறுத்தி - திருப்பூரில் 26-ல் முழுஅடைப்பு, உண்ணாவிரத போராட்டம் : அனைத்து தொழில் அமைப்புகள் முடிவு

நூல் விலையை குறைக்க வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும் 26-ம் தேதி ஒருநாள் முழு அடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனைத்து தொழில் அமைப்புகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் தலைமையில், திருப்பூரில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் வணிகர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நூல் விலையை குறைக்க வலியுறுத்தி மத்திய அரசு, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும் என அனைவரும் கருத்து தெரிவித்தனர். நூல் விலையை குறைக்க வலியுறுத்தி, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 26-ம் தேதி ஒரு நாள் முழு அடைப்பு, உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல கூட்டுக்குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

சைமா, டெக்மா, சாய ஆலை உரிமையாளர்கள், எல்பிஎப், ரோட்டரி பிரிண்டிங் சங்கம், திருப்பூர் தொழில் கூட்டமைப்பு, ஐஎன்டியுசி, நூல் வணிகர் சங்கம், ஏற்றுமதியாளர்கள் அமைப்பு, விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பு, காஜா பட்டன் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள், உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x