Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM

மனு கொடுக்க அனுமதிக்காததால் - கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா :

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், காட்டுமன்னார்கோவில் வட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சர்வராஜன் பேட்டை, திருநாரையூர், எடையார், லட்சிக்குடி, சிறகிழந்தநல்லூர், காட்டுக்கூடலூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் பயிர் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டதாகவும், இந்த பயிர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்தப்பட்ட நிலையில் சில பகுதிகளுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டு, மற்ற பகுதிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படாமல் இருப்பது குறித்த புகாரை ஆட்சியரிடம் மனுவாக அளிக்க வந்தனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி மொத்தமாக உள்ளே விட அனுமதி மறுத்தனர்.

இதனால் அவர்கள் ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் கரிகால்பாரி சங்கர் சம்பவ இடத்திற்குச் சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை உள்ளே செல்ல அனுமதித்த பின்னர் போராட்டத்தை கைவிட்டனர்.

இதேபோன்று கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம் இருப்பு ஊராட்சியைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ராஜவன்னியன் தலைமையில் வந்திருந்த கிராம மக்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இப்பகுதியில் கடந்த 3 மாதமாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. என்எல்சி நிர்வாகத்தால் இப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்து மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x