Published : 20 Nov 2021 03:08 AM
Last Updated : 20 Nov 2021 03:08 AM

வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் - ஈரோட்டில் 3 லட்சம் மரக்கன்றுகள் வழங்கத் திட்டம் : வேளாண் இணை இயக்குநர் தகவல்

வேளாண் காடுகள் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள மரக்கன்றுகள், அறச்சலூர் வன விரிவாக்க மையத்தில் தயாராகி வருகின்றன. அதனை வேளாண் இணை இயக்குநர் சி.சின்னசாமி பார்வையிட்டார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் 3 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது, என வேளாண் இணை இயக்குநர் சி.சின்னசாமி தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருமானம் மற்றும் வேலை வாய்ப்பு கிடைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், ‘தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்’ என்ற புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வேளாண்துறை சார்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ், அறச்சலூர் அருகே வன விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு விநியோகிக்க தயாராக உள்ள மரக்கன்று நாற்றங்கால்களை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சி.சின்னசாமி பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் தேக்கு, வேம்பு, மலைவேம்பு, நாவல், புளியன், சில்வர்ஓக், பெருநெல்லி, செம்மரம் உள்ளிட்ட பல்வேறு தரமான மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. ரூ.15 மதிப்புள்ள இந்த மரக்கன்றுகளைப் பெறுவதற்காக, விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் பதிவு செய்து, மரக்கன்றுகளை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

விவசாய நிலங்களில், வரப்பு நடவு முறை எனில், ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டத்தில் 3.11 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக உழவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மரக்கன்றுகளை பராமரிக்க ஊக்கத்தொகையும் வழங்கப்படும், என்றார்.

ஆய்வின்போது வேளாண்மை துணை இயக்குநர்(உழவர் பயிற்சி நிலையம்) அ.நே.ஆசைத்தம்பி, ஈரோடு வனச்சரகர் ரவீந்தரநாத், வேளாண்மை அலுவலர் கோகுலவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x