Published : 20 Nov 2021 03:09 AM
Last Updated : 20 Nov 2021 03:09 AM

குளிர்கால பருவ பயிர்களை காப்பீடு செய்ய அழைப்பு :

திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குளிர்கால பருவ பயிர்களை விவசாயிகள் காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கவும் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சாகுபடி செய்யப்படும் உளுந்து, தட்டைப்பயறு, சோளம், ராகி மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு தற்பொழுது விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். நடப்பாண்டு அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா என்ற முகமையின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உளுந்து, தட்டைப்பயிறு பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.199 நவம்பர் 30-ம் தேதி வரையும், சோளத்துக்கு ரூ.125 டிசம்பர் 15-ம் தேதி வரையும், ராகி மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு ரூ.140, ரூ.300 டிசம்பர் 31.ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். பயிர் காப்பீடு செய்ய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களை விவசாயிகள் அணுகலாம். அடங்கல், நில உரிமை பட்டா, ஆதார் அட்டை நகல் மற்றும் நடப்பில் உள்ள சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தகத்துடன் உரிய பிரீமியத் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து, இடர்பாடு ஏற்படும் காலத்தில் பயிர் காப்பீட்டுத் தொகையை விவசாயிகள் பெற்று பயன் பெறலாம்.

மேலும், விவரங்களுக்கு, வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x